துலாகட்ட காசி விஸ்வநாதர் கோவில் (தரிசனம்-11.11.2025)
அமைவிடம்
மைலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் துலாமாதம் (ஐப்பசி) காவிரியில் ஸ்நானம் செய்யும் படித்துறையில் அமைந்துள்ள கோவில்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரியில் குளிப்பது என்பது ஹிந்து மதத்தில் ஒரு புனிதமான செயலாக கருதப்படுகிறது. அனைத்து நதிகளும் இந்த மாதத்தில் காவிரியில் கலக்கிறது. நாம் இயற்கையை பாதுகாத்து அதை கடவுளாக வணங்குவதாலும் இந்த செயல் புனிதமாக கருதப்படுகிறது. நீர்நிலையின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு இந்த செயல்பாடு ஒரு காரணமாக அமைகிறது. இந்த ஐப்பசி மாதம் நேரம் ஒதுக்கமுடியதவர்கள் கார்திகை மாதம் முதல் தேதி நீராடலாம். (கருணை நேரம் அல்லது சிறப்பு நேரம் என்று சொல்லலாம். இதுவே முடவன் முழுக்கு என்று சொல்லப்படுகிறது.)
முடவன் முழுக்கு என்றால் என்ன?
மாற்றுத்திறனாளி ஒருவர் மைலாடுதுறை காவியாற்றில் நீராட விருப்பமுற்று கிளம்பினார். அக்காலகட்த்தில் போக்குவரத்துவசதியின்மை காரணமாக நடந்தே சென்றதால் மாதம் நிறைவுபெற்றது. அன்று இரவு கோவில் மண்டபத்தில் தங்கி இறைவனிடம் அவரின் இயலாமையை கூறி வருந்தினார். இறைவன் கனவில் தோன்றி வருந்தாதே கார்திகை மாதம் ஒன்றாம் தேதியாகிய நாளையும் காவிரியில் நீராடினாலும் உனக்கு ஐப்பசிமாதம் நீராடிய பலன் கிடைக்கும் என்று கூறினார். இந்த மாற்றுத்திறனாளியின் பக்தியால் நாமும் நீராட ஒருநாள் அதிகமாக கிடைக்கப்பெற்றோம். கார்திகை ஒன்று நீராடுதலே முடவன் முழுக்கு என்றாகியது.
இத்தலத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநார் என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார்.
பயண அனுபவம்
நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23 ,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி 11 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம். அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம். மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான் பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.
Photos and videos
No comments:
Post a Comment