சிஸ்டர் ஜோஸ்பின்
புனித கேப்ரியேல் உயர் நிலை பள்ளி (ஐயம்பேட்டை) யில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பின் போது பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இவர் சிறந்த ஆசிரியர், இனிமை மற்றும் அன்பாக பழகுவது, பன்முக திறமையாளர் என்று பல வகையில் என்னை மிகவும் கவர்ந்தவர். தலமை ஆசிரியர் என்ற பந்தா இல்லாமல், மிக எளிமையாக எங்களுடன் பழகுவார். சிறிய இடைவேளை மற்றும் உணவு இடைவேளைகளில் மாணவிகள் விளையாட்டு ஆர்வத்தில் அவர் மீது வேகமாக ஓடி மோதியுள்ளனர். அதை மகிழ்சியாக ஏற்று எங்களின் குதுகலத்திலும் பங்குகொண்டுள்ளார். பல முறை நானும் அவரும் பள்ளி வளாகத்தில் பேசி கொண்டே சென்று இருக்கிறோம்;. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட பெருமையும் மகிழ்ச்சியும் இன்றளவும் அசை போடக்கூடிய இனிமையான தருணங்கள். மாதத்தில் ஒரு நாள் சட்டப்பேரவை போன்ற அமைப்பை கூட்டி, சபாநாயகர், துறை மந்திரிகளை நியமித்து அதன் மூலம் எங்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்து, மாணவர்களுக்கு அரசியல் அமைப்பு பற்றிய அடிப்படை அறிவை பயிற்றுவித்தார். பள்ளி வளாகத்தில் கிடக்கும்; குப்பைகளை எந்த மாணவிகளையும் குறிப்பிட்டு அழைத்து எடுக்க சொல்லாமல் போகிற போக்கில் அவரே குனிந்து எடுத்து குப்பையை தொட்டியில் சேர்ப்பார். பள்ளியில் படிப்பு மட்டும் இன்றி விளையாட்டு, தையல், கைவினை என்று பல துறைகளிலும் மாணவிகளின் வளர்ச்சியை தூண்டியவர். பத்தாம்வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலையில், வெளிப்புறத்தில் காற்றோட்டமாக, இடைவெளி விட்டு அமரச்செய்து, நன்கு படிக்கும் சூழலை ஏற்படுத்தி கொடுப்பார். மாலை நேரத்தில் சில நாட்கள் எங்களுக்கு சிற்றுண்டியாக பஜ்ஜி போட Apron அணிந்து சமையல் கூடத்திற்க்கு கிளம்பி விடுவார். மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டுநாட்கள் மாணவிகளின் விடுதியில் உள்ள உணவு கூடத்தில் சினிமா படம் காண்பிப்பார் எங்களுக்காக. அவரே திரை கட்டி, Projector இயக்குவது film roll மாற்றுவது, என்று அனைத்து வேலைகளையும் கற்று வைத்திருந்தார். எனக்கு நினைவில் உள்ள படங்கள் ருத்ரதாண்டவம், குழந்தையும் தெய்வமும். மாணவிகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார். கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், எந்த செயலை செய்ய நினைத்தாலும் பிறரை எதிர்பார்காமல் செய்ய எனக்கு கற்றுக்கொடுத்தவர், எனது ஆசிரியை சிஸ்டர் ஜோஸ்பின் அவர்கள்.
புனித கேப்ரியேல் உயர் நிலை பள்ளி வளாகம் ஐயம்பேட்டை
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் என்னுடைய பள்ளிக்கு சென்று அங்கிருந்த ஒரு கன்னயாஸ்திரியிடம் என்னுடைய பள்ளி நினைவை பகிர்ந்துகொண்டு, அவர்களுடன் நான் எடுத்துக்கொண்ட சுயபுகைப்படும்.





No comments:
Post a Comment